Famous Bharathiyar Tamil Quotes Best Life Inspiration Thoughts and Sayings Tamil Kavithaigal Pictures Free Online
பாமாலை பக்திப் பாடல்கள் !
1.விநாயகர் நான்மணி மாலை
1929 ஆம் ஆண்டில், பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு பதிப்பிக்கப் பெற்றதாகத் தெரிகிறது. கையெழுத்துப் பிரதி அர்ணமா யிருந்த விடங்களில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களையும், கவியோகி சுத்தானந்தா பாரதியார் அவர்களையும் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டதாகவும், கையெழுத்துப் பிரதியிற் காணாதன நகவளைவு (பிராக்கெட்)களுள் தரப்பட்டுள்ளன வென்று அக்காலத்துப் பதிப்பித்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தோத்திரப் பாடல்கள் தொகுதியும், வேதாந்தப் பாடல்கள் தொகுதியும் 1930 ஆம் ஆண்டில்பதிப்பிக்கப் பெற்றன. இத் தொகுதிகளுள் காணப்பெறும் சில பாடல்கள் 1910 ஆம் ஆண்டில் வெளியான பாடல் தொகுதியிலும் சேர்ந்திருந்தன.
விநாயகர் நான்மணி மாலை
வெண்பா
(சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்(தி பெறச் செய்வாக்கு வல்லமைக்கா ) -- அத்தனே
(நின்)றனக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்புநீ யே. 1
கலித்துறை
நீயே சரணம்நின தருளே சரணஞ் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2
[பாட பேதம்]: சக்திவளர் -- சக்திகொள் -- சக்தியுள -- சக்தியுள்ள என்பனவெல்லாம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடபேதங்களாம். கைப்பிரதியில் பாரதியார், 'நூல் செய்திடினும் வல்லமைக்கா' என்பதை அடித்துச் 'சித்' என்று மட்டுமே எழுதியிருந்ததாக முன் பதிப்பில் குறிக்கப்பட்டிருக்கின்றது.
'வல்லமைக்கே' என்கிறார் சுத்தானந்த பாரதியார்.
'வைத்து நூல் செய்திடினும் வல்லமைக்கா' என்பதுவும், 'சித்தமதிற் கொண்டு நூல் செய்வரெனில்' என்பதுவும் கவிமணி அவர்களின் பாடபேதங்களாம்.
கலித்துறை எனக் குறித்தன வெல்லாம் கட்டளைக் கலித்துறைகள்.
விருத்தம்
செய்யுந் தொழிலுடன் தொழிலேகாண்; சீர்பெற் றிடநீ அருள்செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும் வானத் தையுமுன் படைத்தவனே!
ஐயா, நான்முகப் பிரமா, யானை முகனே, வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே, கமலா சனத்துக் கற்பகமே. 3
அகவல்
கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்:
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றேங்ங்கலாம்;
அச்சந் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;1
அமரத் தன்மையு ம்எய்தவும்
இங்குநாம் பெறலாம்; இஃதுணர் வீரே.2 4
[பாட பேதம்]: 1 'வித்தை வளரும்; வீரமே யியல்பாம்' 2 'அமரத் தன்மையு மெய்தவம்; நமர்க ளிதனை நன்குணர் வீரே' -- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
வெண்பா
(உண)ர்வீர், உணர்வீர் உலகத்தீர் இங்குப்
(புண)ர்வீ(ர் அமரரு)றும் போக(ம்) -- கண(ப)தி(யைப்)
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்.) 5
கலித்துறை
காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே. 6
விருத்தம்
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி,
மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல்வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது இவையும் தரநீ கடவாயே. 7
அகவல்
கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்,
[பாட பேதம்]: 'தஞ்சமெனக் கொண்டு தளரா தெந்நாளுமவன் கஞ்சமலர்த் தாள் பணிந்தக்கால்'
(அல்லது)
'நெஞ்சிலிருத்தி நிதமுமன் பாகவவன
கஞ்சமலர்த் தாள் பணிந்தக் கால்'
'நூறு வய தெல்லாந்தர நீ கடவாயே
-- கவிமணி
பிற நாட் டிருப்போர் பெயர்பல கூறி,
அல்லா யெஹோவா எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல் --
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்,
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்;
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே. 8
வெண்பா
களியுற்று நின்று கடவுளே யிங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய் -- ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து.
9
கலித்துறை
துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக்
குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.
10
விருத்தம்
தவமே புரியும் வகையறியேன், சலியா துறநெஞ் சறியாது,
சிவமே நாடிப் பொழுதனைத்தும் தியங்கித் தியங்கி-நிற்பேனை,
[முதற் பதிப்பு]: ‘விநாயக தேவா, வேத நாயகா.’
நவமா மணிகள் புனைந்தமுடி நாதா, கருணா லயனே, தத்
துவமா கியதோர் பிரணவமே, அஞ்சேல் என்று சொல்லுதியே. 11
அகவல்
சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்ப்
பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சக்தியே தானுந் தனிச்சுடர்ப் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று,
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் மினியனாய்
வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீ யிதை
ஆழ்ந்து கருதியாய்ந் தாய்ந்து, பலமுறை
சூழ்ந்து, தெளிந்துபின் சூழ்ந்தார்க் கெல்லாம்,
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறிநான் சித்திபெற்றிடவே,
நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
பொன்னா லுனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே, எனைநீ வாழ்வித் திடுவாய்.
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே. 12
வெண்பா
புகழ்வோங் கணபதிநின் பொற்கழலை நாளுந்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே -- இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யை யெலாம்; ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம். 13
கலித்துறை
வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலைமை விருப்பமும் ஐயமுங் காய்ந்தெறிந்து
‘சிரமீதெங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர்’ என்றுளத் தேகளி சார்ந்ததுவே. 14
விருத்தம்
சார்ந்து நிற்பாய் எனதுளமே, சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து, பரம சிவாநந்தர் பேற்றை நாடி, நாள்தோறும்
ஆர்ந்த வேதப் பொருள்காட்டும் ஐயன், சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடர்கள் போக்கிடுநங் கோமான் பாதக் குளிர்நிழலே. 15
அகவல்
நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் வானினு எனக்குய
பகைமை யொன் றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்
உள்ளத் தோங்க நோக்குறும் விழியும்
மௌன வாயும் வரந்தரு கையும்
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூலவித் தாவான்
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்
ஏழையர்க் கெலாம் இரங்கும் பிள்ளை
வாழும் பிள்ளை மணக்குளப் பிள்ளை
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே. 16
வெண்பா
முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே,
இறையேனும் வாடாய் இனிமேல் -- கறையுண்ட
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை. 17
கலித்துறை
துணையே, எனதுயி ருள்ளே யிருந்து சுடர்விடுக்கும்
மணியே; எனதுயிர் மன்னவனே, என்றன் வாழ்வினுக்கோர்
அணியே, எனுள்ளத்தி, லார முதே என தற்புதமே,
இணையே துனக்குரைப் பேன்கடை வானில் எழுஞ்சுடரே. 18
விருத்தம்
சுடரே போற்றி, கணத்தேவர் துரையே போற்றி, எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய், எண்ணா யிரங்கால் முறையிட்டேன்;
படர்வான் வெளியிற் பலகோடி கோடி கோடிப் பல்கோடி
இடரா தோடு மண்டலங்கள் இசைத்தாய், வாழி இறையவனே.
19
அகவல்
இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்
தேவ தேவா, சிவனே, கண்ணா,
வேலா, சாத்தா, விநாயகா, மாடா,
இருளா, சூரியா, இந்துவே, சக்தியே,
வாணீ, காளீ, மாமக ளோயோ,
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே,
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயம்நான் கேட்டேன்,
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. 20
வெண்பா
கடமை தானேது கரிமுகனே வையத்
திடம்நீ யருள்செய்தாய் எங்க-ள் உடைமைகளும்
இன்பங்களு மெல்லாம் ஈந்தாய் நீ யாங்களுனக்கு
என்புரிவோம் கைம்மா றியம்பு. 21
கலித்துறை
இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும் எடுத்தவினை
பயன்படும் தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே. 22
[பாட பேதம்]: : ‘பாவம் வேண்டேன், பல்சுவை வேண்டினேன்;
இழிவு வேண்டேன், இன்பம் வேண்டினேன்’ என்றும்,
‘பிறர்துயர் வேண்டேன், பெருமை வேண்டினேன்;
கொலையினை வேண்டேன், தலைமையை வேண்டினேன்;
களவு வேண்டேன், காதல்-வேண்டினேன்.’
என்றும் முதற் பதிப்பிலே உள்ளன.
விருத்தம்
மேன்மைப் படுவாய் மனமேகேள் விண்ணின் இடிமுன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே, பயத்தால் ஏதும் பயனில்லை,
யான்முன் உரைத்தேன் கோடிமுறை, இன்னுங் கோடிமுறை சொல்வேன்,
ஆன்மா வான கணபதியின் அருளுண்டு அச்சம் இல்லையே. 23
அகவல்
அச்ச மில்லை, அமுங்குத லில்லை,
நடுங்குத லில்லை, நாணுத லில்லை,
பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்;
கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு,
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே;
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும் காணநல் லுலகுமு
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்றுமிங் குளவாம்; சலித்திடாய், ஏழை
நெஞ்சே; வாழி, நேர்மையுடன் வாழி,
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல். மன்னோ
தஞ்ச முண்டு, சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. 24
வெண்பா
நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்;-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றும் செய். 25
கலித்துறை
செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே
பையத் தொழில்புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே. 26
விருத்தம்
பக்தி யுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல் மெல்லச் செய்து பயனடைவார்,
சக்தி தொழிலே அனைத்துமெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா, கணநாதா, மேன்மைத் தொழிலிற் பணியெனையே. 27
அகவல்
எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றே பூமி யாள்வார்;
யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறிஅதிற் சிவநிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்;
மங்கள குணபதி மணக்குளக் கணபதி
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் அசை மகனே.
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி
ஆள்வதும் பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்;
காத்தருள் புரிக, கற்பக விநாயகா,
காத்தருள் புரிக, கடவுளே, உலகெலாம்
கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே,
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா, போற்றி!
சங்கரன் மகனே தாளிணை போற்றி!
28
வெண்பா
போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே
ஆற்ற லருளி அடியேனைத் -- தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணியருள்
வீணையொலி என்நாவில் விண்டு. 29
[பாட பேதம்]: : முதற் பதிப்பில்,
‘யானை முகனே இங்குவந் தருள்செய்
ஓங்கார ரூபா உண்மைப் பொருளே’
என்றும்,
‘மாதவன் மருகா மணிமலர்த் திருவடி
வாழ்த்திடுந் தொழிலில் வாழ்வித் தருள்வாய்
அசுரரைக் காய்வாய், ஆரண நாதா’
என்றும்,
‘விநாயக தேவா, வேலா, தீயே,
மதியே, ஞாயிறே, அடியேன் மனத்தினுன்
பதத்தினை நாட்டிப் படரு மிடரெலாம்
போக்கி யாள்வாய் புனிதா போற்றி’
என்றும் உள்ளன.
கலித்துறை
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கிஎன்னாவிற் பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே. 30
விருத்தம்
செய்யாள் இனியால் ஸ்ரீ தேவி, செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்
கையா ளெனநின் றடியேன்செய் தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள்; புகழ்சேர் வாணியுமென்னுள்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள், சக்தி துணைபுரிவாள், பிள்ளாய், நின்னைப் பேசிடிலே. 31
அகவல்
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் --
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனைநீ
திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி
[முதற் பதிப்பு]: ‘நின்னைப் பேணிடிலே’ (அல்லது)
‘நின்னைப் பேசினிலே.’
‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே. 32
வெண்பா
உனக்கேஆன் எவியும் உள்ளமும் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி -- (எனக்கே நீ)
நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. 33
கலித்துறை
விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன்
அரங்கத்தி லேதிரு மாதுடன் பள்ளிகொண் டான்மருகா!
வரங்கள் பொழியும் முகிலே என்னுள்ளத்து வாழ்பவனே! 34
விருத்தம்
வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே;
ஆழ்கம் உள்ளஞ் சலனமிலாது அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க; துயர்கள் தொலைந்திடுக; தொலையா (இன்பம் விளைந்திடுக)
வீழ்க கலியின் வலியெல்லாம், கிருத யுகந்தான் மேவுகவே. 35
[பாட பேதம்]: முதற் பதிப்பிலே,
‘அத்தனே, ஆருயிர்த் தெய்வமே, அகண்டா
நித்தியப் பொருளே நிர்மலா நந்தமே
சத்தியப் பொருளே சரணம்’
என்று உள்ளது.
‘மனக்கேடனைத் தினையு மாற்றி’ என்பது பாடபேதம்.
‘எனக்கே’ என்பதற்குப் பதிலாக ‘எனக்கு நீ’ என்பது கவிமணி
அவர்களின் பாடபேதம்.
அகவல்
மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்; எதற்குமினி அஞ்சேல்
ஐயன் பிள்ளை (யார்) அருளால் உனக்குநான்
அபயமிங் களித்தேன்.....நெஞ்(சே)
நினக்கு நான் உரைத்தன நிலைநிறுத் தி(டவே)
தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்,
ஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன்;
மூட நெஞ்சே, முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்; இன்னும் மொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும் ‘நமக்கேன்’ என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்;
நமக்கேன் பொறுப்பு? “நான் என்றோர் தனிப்பொருள்
இல்லை; நானெனும் எண்ணமே வெறும்பொய்”
என்றான் புத்தன்; இறைஞ்சுவோம் அவன்பதம்.
இனியெப் பொழுதும் உரைத்திடேன். இதை நீ
மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!
கவலைப் படுதலே கருநர கம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி;
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே. 36
வெண்பா
செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம்செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்! -- வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு. 37
கலித்துறை
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே. 38
[பாட பேதம்]: : ‘வாழ்க வியல்பு’
விருத்தம்
மொய்க்குங் கவலைப் பகைபோக்கி, முன்னோன் அருளைத் துணையாக்கி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி, யுடலை யிரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று, பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதியிஃதே. 39
அகவல்
விதியே வாழி, விநாயகா வாழி,
பதியே வாழி, பரமா வாழி,
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே; போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கு
மூல சக்தியின் முதல்வா, போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி,
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி,
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி, வீரம் வாழி!
பக்தி வாழி, பலபல காலமும்
உண்மை வாழி, ஊக்கம் வாழி,
நல்ல குணங்களே நம்மிடை யமரர்
பதங்களாம், கண்டீர், பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன்; வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே. 40
[பாட பேதம்]: ‘மொய்ம்பினையே’ -- தேசிக விநாயகம் பிள்ளை.
----------------------------------------------------------------------------------------------------
2. தோத்திரப் பாடல்கள்
1.ஆறு துணை
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -- பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி -- ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
கணபதி ராயன் -- அவனிரு
காலைப் பிடித் திடுவோம்
குணமுயர்ந் திடவே -- விடுதலை
கூடி மகிழ்ந் திடவே
(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 1
சொல்லுக் கடங்காவே -- பராசக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் -- பராசக்தி
வாழி யென்றே துதிப்போம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 2
வெற்றி வடிவேலன் -- அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றிநில் லாதேபோ! -- பகையே!
துள்ளி வருகுதுவேல். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 3
தாமரைப் பூவினிலே -- சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே -- கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 4
பாம்புத் தலைமேலே -- நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ் வோம்
மாம்பழ வாயினிலே -- குழலிடஞ
வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 5
செல்வத் திருமகளைத் -- திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்.
செல்வ மெல்லாந் தருவாள் -- நமதொளி
திக்க னைத்தும் பரவும். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 6
--------------------------------------------------------------------------
2.பக்தி
[ராகம் -- பிலஹரி]
பல்லவி
பக்தியி னாலே -- தெய்வ -- பக்தியி னாலே.
சரணங்கள்
பக்தியி னாலே -- இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும், -- இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும், -- நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், -- நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும், (பக்தியி னாலே) 1
காமப் பிசாசைக்-குதி
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்; இத்
தாமசப் பேயைக் -- கண்டு
தாக்கி மடித்திட லாகும்; எந் நேரமும்
தீமையை எண்ணி -- அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகி யெறிந்துபொய்ந்
நாம மில்லாதே -- உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்,
(பக்தியி னாலே) 2
ஆசையைக் கொல்வோம், -- புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம்,-இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் -- உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி -- இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்,
(பக்தியி னாலே) 3
சோர்வுகள் போகும், -- பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும், நற்
பார்வைகள் தோன்றும், -- மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும், -- பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்,
தீர்வைகள் தீரும், -- பிணி
தீரும், பலபல இன்பங்கள் சேர்ந்திடும்,
(பக்தியி னாலே) 4
கல்வி வளரும், -- பல
காரியங் கையுறும், வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும், -- நல்ல
ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும்,
சொல்லுவ தெல்லாம் -- மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும், மெய்
வல்லமை தோன்றும், -- தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம், உண்மை
(பக்தியி னாலே) 5
சோம்ப லழியும், -- உடல்
சொன்ன படிக்கு நடக்கும், முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
வீம்புகள் போகும், -- நல்ல
மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும், பொய்ப் பாம்பு மடியும், -- மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும்,
(பக்தியி னாலே) 6
சந்ததி வாழும், -- வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்,
‘இந்தப் புவிக்கே -- இங்கொர்
ஈசனுண் டாயின் அறிக்கையிட் டேனுன்றன்
கந்த மலர்த்தாள் -- துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என்
சிந்தை யறிந்தே -- அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும்,
(பக்தியி னாலே) 7
-----------------------------------------------------------
3.சரசுவதி தோத்திரம்
(நொண்டிச் சிந்து)
எங்ஙனம் சென்றிருந்தீர் -- எனது
இன்னுயிரே என்றன் இசையமுதே
திங்களைக் கண்டவுடன் -- கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் -- கடல்
காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்தெனவே -- அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.
1
மாதமொர் நான்காநீர் -- அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்.
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன்
பாவமேலாங்கெட்டு ஞான கங்கை
நாதமொ டெப்பொழுதும் -- என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர்! -- அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!
2
கண்மணி போன்றவரே! -- இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் -- சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்
வண்மையில் ஓதிடுவீர்! -- என்றன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! -- இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ?
3
தானெனும் பேய்கெடவே, -- பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே, -- நல்ல
வாய்மையி லேமதி நிலைத்திடவே,
வானெனப் பொழிந்திடுவீர்! -- அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! -- நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!
4
தீயினை நிறுத்திடுவீர்! -- நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே -- உம்மை
மதிப்பது மறந்தனன் பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் --பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; -- இனி
மறக்ககிலேன் எனை மறக்ககிலீர்! 5
-------------------------------------------------------------------------------
4. சரசுவதி தேவியின் புகழ்
ஆனந்த பைரவி ராகம் -- சாப்பு தாளம்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்) 1
[பாட பேதம்]: 'தேன்னப் பொழிந்திடுவீர்'
-- கவிமணி
[முதற் பதிப்பு]: 'பதிப்பது மறந்தன'
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்) 2
வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) 3
தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்) 4
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) 5
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்) 6
ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்) 7
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்) 8
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்) 9
நிதிமி குத்தவர் பொற்றகுவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்!
ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்!
வாணி சைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்) 10
-------------------------------------------------------------------------------
5.லக்ஷ்மி தேவி -- சரண் புகுதலா
மாதவன் சக்தியினைச் -- செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்
போதுமிவ் வறுமையெலாம் -- எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை -- அன்னை
மாமக ளடியிணை சரண்புகுவோம். 1
கீழ்களின் அவமப்பும் -- தொழில்
கெட்டவரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப்போல் -- செய்யும்
முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்
ஏழ்கட லோடியுமோர் -- பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கஇக் கொடு நோய்தான் -- வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ! 2
பாற்கட லிடைப் பிறந்தாள் -- அது
பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்
ஏற்குமோர் தாமரைப்பூ -- அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்
நாற்கரந் தானுடையாள் -- அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்
வேற்கரு விழியுடையாள் -- செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள். 3
நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தரிலும் -- பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தந் தோளினிலும் -- உடலில்
வெயர்த்திட வுழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் -- ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள். 4
பொன்னிலும் மணிகளிலும் -- நறும்
விலும் பூசாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் -- செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் -- மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி -- அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம். 5
[பாட பேதம்]: 'வீழ்கவிக் கொடு' -- முதற்பதிப்பு
'வீழ்கவக் கொடு' -- கவிமணி
மண்ணினுட் கனிகளிலும் -- மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் -- உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் -- நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை -- எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 6
வெற்றிகொள் படையினிலும் -- பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் -- நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை -- நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம் -- அவள்
கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம். 7
------------------------------------------------------------------------------------------
6.லக்ஷ்மி பிரார்த்தனை
திரு வேட்கை
ராகம் -- நாட்டை தாளம் -- சதுஸ்ர ஏகம்
மலரின் மேவு திருவே; -- உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் -- காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் -- தெய்வக்
களிது லங்கு நகையும்
இலகு செல்வ வடிவும் -- கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன். 1
கமல மேவும் திருவே! -- நின்மேல்
காதலாகி நின்றேன்;
குமரி நின்னை இங்கே -- பெற்றோர்
கோடி யின்ப முற்றார்;
அமரர் போல வாழ்வேன், -- என்மேல்
அன்பு கொள்வை யாயின்;
இமய வெற்பின் மோத, -- நின்மேல்
இசைகள்பாடி வாழ்வேன்;
2
[பாட பேதம்]: தொடையினிலும்
வாணி தன்னை என்றும் -- நினது
வரிசை பாட வைப்பேன்;
நாணி யேக லாமோ? -- என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வைய மெல்லாம் -- நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் -- கண்ணன்
பொறிக ளாவரன்றோ?
3
பொன்னும் நல்ல மணியும் -- சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் -- பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னுரைப்ப னேடீ! -- திருவே!
என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் -- தழுவி
நிகரிலாது வாழ்வேன்; 4
செல்வ மெட்டு மெய்தி -- நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்;
இல்லை என்ற கொடுமை -- உலகில்
இல்லை யாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் -- காட்டி,
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! -- எனைநீ
என்றும் வாழ வைப்பாய். 5
---------------------------------------------------------------
7.ஸ்ரீ தேவி சதுதி
திருமகள்
[ராகம் -- சக்கரவாகம்] [தாளம் -- திஸ்ர ஏகம்]
நித்தமுனை வேண்டி மனம் நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றிகொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்
சுத்த வெறும் பொய்யோடீ? சுடர்மணியே! திருவே,
மெத்தமயல் கொண்டு விட்டேன் மேவிடுவாய், திருவே! 1
உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்! புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப்பூ
மணிக்குள முள்ள சோலைகளும்
அன்னம் நறுநெய் பாலும் அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன், திருவே! 2
[பாட பேதம்]: ‘வெற்றி கண்டே’
‘சுத்த முழுப் பொய்யோகாண்’
‘வாழ்த்திநன்றா நிலமளிப்பேன், திருவே.’
-- கவிமணி
ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய்.
ஈடு நினக் கோர் தெய்வ முண்டோ?
எனக்குனை யன்றிச் சரணமுண்டோ?
வாடு நிலத்தைக் கண்டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ?
நாடு மணிச் செல்வ மெல்லாம் நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே பெருங்களியே, திருவே! 3
--------------------------------------------------------------------------
8.நவராத்திரிப் பாட்டு
உஜ்ஜயினீ! நித்ய கல்யாணீ!
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
(உஜ்ஜயினீ!)
உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸவதீ ஸ்ரீஸ மாதா சா.
(உஜ்ஜயினீ!)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம்.
(உஜ்ஜயினீ!)
சத்ய யுகத்தை அகத்தி லிருத்தித்
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி
(உஜ்ஜயினீ!)
--------------------------------------------------------------------------------
9.நவராத்திரிப் பாட்டு
பராசக்தி
(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)
மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே. 1
வாணி
வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே. 2
ஸ்ரீ தேவி
பொன்னரசி, நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீ தேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. 3
பார்வதி
மலையிலே தான் பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே. 4
----------------------------------------------------------------------------------------
10.மூன்று காதல்
முதலாவது -- சரஸ்வதி காதல்
[ராகம் -- சரஸ்வதி மனோஹரி] [தாளம் -- திஸ்ர ஏகம்]
பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்
பள்ளிப் படிப்பினிலே -- மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -- அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் -- கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா! 1
ஆடிவரு கையிலே -- அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்
ஏடு தரித்திருப்பாள், -- அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால், -- பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று
கூடி மகிழ்வ? மென்றால், -- விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!
2
ஆற்றங் கரைதனிலே -- தனி்
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன், -- அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை
ஏற்று மனமகிழ்ந்தே ?அடி
என்னோ டிணங்கி மணம்புரிவாய்? என்று
போற்றிய போதினிலே, -- இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா! 3
சித்தந் தளர்ந்ததுண்டோ? -- கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் -- பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் -- பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் -- வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா! 4
இரண்டாவது -- லக்ஷ்மி காதல்
[ராகம்-ஸ்ரீ ராகம்] [தாளம்-திஸ்ர ஏகம்]
இந்த நிலையினிலே -- அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் -- அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் -- அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்
அந்தத் தின முதலா -- நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா! 5
புன்னகை செய்திடுவாள், -- அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சறறென்
முன்னின்று பார்த்திடுவாள், -- அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்; பின்னர்
என்ன பிழைகள் கண்டோ -- அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள் அங்கு
சின்னமும் பின்னமுமா -- மனஞ்
சிந்தியுளமிக நொந்திடு வேனம்மா! 6
காட்டு வழிகளிலே, -- மலைக்
காட்சியிலே, புனல் வீழ்ச்சி யிலே
நாட்டுப் புறங்களிலே, நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
வேட்டுவர் சார்பினிலே, -- சில
வீரரிடத்திலும், வேந்தரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் -- கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போமம்மா! 7
மூன்றாவது -- காளி காதல்
[ராகம் -- புன்னாகவராளி] [தாளம்-திஸ்ர ஏகம்]
பின்னொர் இராவினிலே -- கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே -- களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! -- இவள்
ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! -- பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8
செல்வங்கள் பொங்கிவரும்; -- நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே -- இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை -- இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை -- நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 9
------------------------------------------------------------------------------
11.முருகன் பாட்டு
[ராகம் -- நாட்டைக் குறிஞ்சி] [தாளம் -- ஆதி]
பல்லவி
முருகா -- முருகா -- முருகா
சரணங்கள்
வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும். (முருகா) 1
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா) 2
சுருதிப் பொருளே, வருக.
துணிவே, கனலே, வருக.
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா) 3
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம், சரணம்!
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம். (முருகா) 4
அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே, வளர்வாய், அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய். (முருகா) 5
குருவே, பரமன் மகனே,
குகையில் வளருங் கனலே,
தருவாய் தொழிலும் பயனும், அமரர்
சமரா திபனே, சரணம், சரணம். (முருகா) 6
---------------------------------------------------------------------------------
12.முருகன் பாட்டு
வீரத் திருவிழிப் பார்வையும் -- வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே -- எந்த
நேரத் திலும் எனைக் காக்குமே; -- அன்னை
நீலி பராசக்தி தண்ணருட் -- கரை
ஓரத்திலே புணை கூடுதே; -- கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே; -- மலை
வாரத்திலேவிளை யாடுவான் -- என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான். 1
வேடர் கனியை விரும்பியே -- தவ
வேடம் புனைந்து திரிகுவான்; -- தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -- முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்; -- சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட -- இருட்
பார மலைகளைச் சீறுவான்; -- மறை
யேடு தரித்த முதல்வனும்;-குரு
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான். 2
தேவர் மகளை மணந்திடத் -- தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்; -- மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்; -- மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்; -- தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்; -- இந்தப்
பாரில் அறமழை பெய்குவான்; -- நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்; -- நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான். 3
தீவளர்த் தேபழ வேதியர் -- நின்றன்
சேவகத் தின்புகழ் காட்டினார்; -- ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார் -- நின்றன்
மேன்மையி னாலற நாட்டினார்; -- ஐய,
நீவள ருங்குரு வெற்பிலே -- வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம் -- வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான் -- உங்கள்
இன்னரு ளேயென்று நாடுவோம்-நின்றன் 4
வீரத் திருவிழிப் பார்வையும் -- வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே
-------------------------------------------------------------------------------
13.முருகக் கடவுள்மீது கிளித் தூது
பல்லவி
சொல்ல வல்லா யோ? -- கிளியே
சொல்ல நீ வல்லாயோ?
அனுபல்லவி
வல்ல வேல் முருகன் -- தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று (சொல்ல)
சரணங்கள்
தில்லை யம்பலத்தே -- நடனம்
செய்யும் அமரர்பிரான் -- அவன்
செல்வத் திருமகனை -- இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல) 1
அல்லிக் குளத்தருகே -- ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே -- அங்கொர்
முல்லைச் செடியதன்பாற் -- செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல) 2
பாலை வனத்திடையே -- தனைக்கைப்
பற்றி நடக்கையிலே -- தன்னகை
வேலின் மிசையாணை -- வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று (சொல்ல) 3
‘குருவெற்பு’ என்பது திருநெல்வேலிக்கு அண்மையிலுள்ள
சுப்பிரமணிய க்ஷேத்திரமாகிய ‘குரு மலை’ என்னும்
ஊராகும்.
‘நின் சேவகம்’ என்பதற்குப் பதிலாகத் ‘திருப்புகழ்’ என்றும்
ஒரு பாடம் உண்டு.
------------------------------------------------------------------------------------
14.வேலன் பாட்டு
[ராகம் -- புன்னாகவராளி] [தாளம் -- திஸ்ர ஏகம்]
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை,
வேலவா! --அங்கொர்
வற்பு நொறுங்கிப் பொடிப் பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக் --கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே.
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன் --சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரை யிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை --ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக் கரந
தொட்ட வேலவா!
1
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை --உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
செல்வத்தை --என்றும்
கேடற்ற வாழ்வினை இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன் --பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை
மணஙகொண்ட வேலவா! 2
குறிப்பு: -- வேலன் அல்லது சுப்பிரமணியக் கடவுள் என்பது
ஆத்மாவின் வீர்ய
ரூபமாகிய அக்னி தேவனுக்குப் பெயர். இஃது வேதப் பொருள்.
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
மாகுதே; --கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணி பசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக் --கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள் --எங்கள்
வைரவி பெற்ற பெரு ங்கன
லேவடி வேலவா! 3
------------------------------------------------------------------------------------------------------
15.ஆரிய தரிசனம் - ஓர் கனவு
[ஸ்ரீ ராகம் -- ஆதி தாளம்.]
கனவென்ன கனவே -- என்றன்
கண்துயி லாது நனவினிலே யுற்ற (கன) (கன)
கானகங் கண்டேன் -- அடா
கானகங் கண்டேன் -- உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன) 1
[பாட பேதம்]: 'சிரித்திடுங் கோழியாய்'
'அடா' என்பதற்குப் பதிலாக 'அடர்' என்றும்
பாடபேதமுண்டு.
பொற்றிருக் குன்றம் -- அங்கொர்
பொற்றிருக் குன்றம்-அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும்.
(கன) 2
புத்த தரிசனம்
குன்றத்தின் மீதே -- அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்றதொர் ஆலநெடுமரங் கண்டேன். (கன) 3
பொன்மரத் தின்கீழ் -- அந்தப்
பொன்மரத் தின்கீழ் -- வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன்.
(கன) 4
புத்த பகவன் -- எங்கள்
புத்த பகவன் -- அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன) 5.
காந்தியைப் பார்த்தேன் -- அவன்
காந்தியைப் பார்த்தேன் -- உப
சாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன்
.(கன) 6.
ஈதுநல் விந்தை! -- என்னை!
ஈதுநல் விந்தை! -- புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன்.
(கன) 7
பாய்ந்ததங் கொளியே; -- பின்னும்
பாய்ந்ததங் கொளியே! -- அருள்
தோய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன) 8
கிருஷ்ணார்ஜீன தரிசனம்
குன்றத்தின் மீதே -- அந்தக்
குன்றத்தின் மீதே -- தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன்.
(கன) 9
தேரின்முன் பாகன் -- மணித்
தேரின்முன் பாகன் -- அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக்
(கன) 10
ஓமென்ற மொழியும் -- அவன்
ஓமென்ற மொழியும் -- நீலக்
காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும்
(கன) 11
அருள் பொங்கும் விழியும் -- தெய்வ
அருள் பொங்கும் விழியும் -- காணில்
இருள் பொங்கும் நெஞ்சினர் வெருள் பொங்குந் திகிரியும், (கன) 12
கண்ணனைக் கண்டேன் -- எங்கள்
கண்ணனைக் கண்டேன் -- மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன) 13
சேனைகள் தோன்றும் -- வெள்ளச்
சேனைகள் தோன்றும் -- பரி
யானையுந் தேரும் அளவில தோன்றும். (கன) 14
கண்ணன் நற் றேரில் -- நீலக்
கண்ணன் நற் றேரில் -- மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)
15
விசையன்கொ லிவனே! -- விறல்
விசையன்கொ லிவனே! -- நனி
இசையுநன் கிசையுமிங் கிவனுக்கின் நாமம்.
(விசை) 16
வீரிய வடிவம்! -- என்ன
வீரிய வடிவம்! -- இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை!
(விசை) 17
பெற்றதென் பேறே -- செவி
பெற்றதென் பேறே -- அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன்.
(கன) 18
?வெற்றியை வேண்டேன்; -- ஐய,
வெற்றியை வேண்டேன்; -- உயிரை
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன்.
(பெற்ற) 19
சுற்றங் கொல்வேனோ? -- என்றன்
சுற்றங் கொல்வேனோ? -- கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ??
(பெற்ற) 20
மிஞ்சிய அருளால் -- மித
மிஞ்சிய அருளால் -- அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான்.
(கன) 21
இம்மொழி கேட்டான் -- கண்ணன்
இம்மொழி கேட்டான் -- ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான்.
(கன) 22
வில்லினை யெடடா -- கையில்
வில்லினை யெடடா -- அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா.
(வில்லினை) 23
வாடி நில்லாதே; -- மனம்
வாடி நில்லாதே; -- வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே.
(வில்லினை) 24
ஒன்றுள துண்மை -- என்றும்
ஒன்றுள துண்மை -- அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது.
(வில்லினை) 25
துன்பமு மில்லை -- கொடுந்
துன்பமு மில்லை -- அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை.
(வில்லினை)
26
படைகளுந் தீண்டா -- அதைப்
படைகளுந் தீண்டா -- அனல்
சுடவு மொண்ணாது புனல்நனை யாது.
(வில்லினை)
27
செய்தலுன் கடனே -- அறஞ்
செய்தலுன் கடனே -- அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே.
(வில்லினை)
28
----------------------------------------------------------
16.கண்ணன் பிறப்பு
கண்ணன் பிறந்தான் -- எங்கள்
கண்ணன் பிறந்தான் -- இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.
திண்ண முடையான் -- மணி
வண்ண முடையான் உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்.
1
பண்ணை யிசைப்பீர் -- நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் -- இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் -- நன்கு
கண்ணை விழிப்பீர் -- இனி
ஏதுங்குறைவில்லை: வேதம் துணையுண்டு.
்
2
அக்கினி வந்தான் -- அவன்
திக்கை வளைத்தான் -- புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்;
துக்கங் கெடுத்தான்சுரர்
ஒக்கலும் வந்தார் -- சுடர்ச்
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள
3
மிக்க திரளாய் -- சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்; பாவி யசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார், -- உயிர்
கக்கி முடிந்தார் ; -- கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை.
4
சங்கரன் வந்தான்; -- இங்கு
மங்கல மென்றான்; -- நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்;
பங்க மொன் றில்லை -- ஒளி
மங்குவதில்லை; இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
(கண்ணன் பிறந்தான்)
5
கங்கையும் வந்தாள்; -- கலை
மங்கையும் வந்தாள்; -- இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்;
செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள் -- திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.
(கண்ணன் பிறந்தான்) 6
[பாட பேதம்]: ‘முடித்தார்’
-----------------------------------------------------------------------
17.கண்ணன் வரவு
பல்லவி
வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணா
வருவாய், வருவாய், வருவாய்.
சரணங்ள்
உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணா
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் -- கண்ணா (வருவாய்) 1
இணைவாய் எனதா வியிலே -- கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் -- கண்ணா
கணைவா யசுரர் தலைகள் -- சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்!
(வருவாய்) 2
எழுவாய் கடல்மீ தினிலே -- எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே -- கண்ணா,
துணையே, அமரர் தொழும்வா னவனே!
(வருவாய்)
3
----------------------------------------------------------------------------------
18.கண்ணன் துதி
காயிலே புளிப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
கனியிலே இனிப்பதென்னே?
கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?
கண்ண பெருமானே!
1
காற்றிலே குளிர்ந்ததென்னே?
கண்ண பெருமானே! -- நீ
கனலிலே சுடுவதென்னே?
கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே?
கண்ண பெருமானே! -- நீ
திக்கிலே தெளிந்ததென்னே?
கண்ண பெருமானே! 2
ஏற்றிநின்னைத் தொழுவதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
எளியர் தம்மைக் காப்பதென்னே?
கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே?
கண்ண பெருமானே! -- நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?
கண்ண பெருமானே! 3
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
கண்ண பெருமானே! -- நீ
பொன்னடி போற்றி நின்றேன்,
கண்ண பெருமானே! 4
----------------------------------------------------------------------------------------------------
19.கண்ணம்மாவின் -- அங்க வர்ணனை
[ராகம் -- செஞ்சுருட்டி] [தாளம் -- ரூபகம்]
பல்லவி
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ
எங்கள் கண்ணம்மா நுதல் பாலசூரியன்
சரணங்கள்
எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறி குழல்; இவள் நாசி எட்பூ
.(எங்கள்) 1
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று
மதுர வாய் அமிர்தம்; இதழமிர்தம்
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை
சாய லரம்பை, சதுர் அயிராணி
(எங்கள்) 2
இங்கித நாத நிலைய மிருசெவி;
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்
மங்களக் கைகள் மஹாசக்தி வாசம்
வயிறா லிலை; இடை அமிர்த வீடு.
(எங்கள்) 3
சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்
தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்
பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்.
(எங்கள்) 4
-----------------------------------------------------------------------------------------------
20.கண்ணம்மா (1)
பல்லவி
பீடத்தி லேறிக் கொண்டாள் -- மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.
சரணங்கள்
நாடித் தவம் புரிந்து -- பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு -- கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக் -- கூடத்தில் விளையாடி
ஓடத் திரிந்து கன்னி -- வேடத்தில் ரதியைப்போல்
ஈடற்ற கற்பனைகள் -- காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் -- ஊடுற்றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப -- வீடொத் தினிமைசெய்து
வேடத்தில் சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி) 1
கண்ணன் திருமார்பிற் -- கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் -- வீரச் சிங்கா தனத்தே,
நண்ணிச் சிவனுடலை -- நாடுமவ ளென்கோ?
எண்ணத் திதிக்குதடா, இவள்பொன் னுடலமுதம்
பெண்ணி லரசியிவள் -- பெரிய எழிலுடையாள்
கண்ணுள் மணியெனக்குக் -- காத லிரதியிவள்
பண்ணி லினியசுவை -- பரந்த பொழியினாள்
உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி) 2
-------------------------------------------------------------------------------------------------
21.கண்ணம்மா (2)
பல்லவி
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -- கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரண மெய்தினேன். (நின்னையே)
சரணங்கள்
பொன்னையே நிகர்த்தமேனி மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே -- நித்ய கன்னியே, -- கண்ணம்மா! (நின்னையே) 1
மாரனம் புகளென்மீது வாரிவாரி வீச நீ -- கண்
பாராயோ -- வந்து சேராயோ, -- கண்ணம்மா! (நின்னையே) 2
யாவு மே சுகமுனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மேவு மே இங்கு யாவுமே, -- கண்ணம்மா! (நின்னையே) 3
---------------------------------------------------------------------------------------------------
22.கண்ணம்மா (3)
காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு
தூற்றினை யொத்த இதழ்களும் -- நில
வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக் (காற்று வெளி) 1
நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர்
போயின, போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன்
வாயினி லேயமு தூறுதே -- கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக் (காற்று வெளி) 2
--------------------------------------------------------------------------------------------------------
23.தோத்திரப் பாடல்கள்
திருவே நினைக்காதல் கொண்டேனே -- நினது திரு
உருவே மறவா திருந்தேனே -- பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே -- நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே -- அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே -- மிகவும்நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே -- இடைம்நடுவில்
பையச் சதிகள்செய் தாயே -- அதனிலுமென்
மையல் வளர்தல்கண் டாயே -- அமுதமழை
பெய்யக் கடைக்கண்நல் காயே -- நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே -- பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப் பேனே -- அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே -- அடியெனது
தேனே, எனதிரு கண்ணே, -- எனையுகந்து
தானே வருந்திருப் -- பெண்ணே!
-------------------------------------------------------------------------------------
24.சூரிய தரிசனம்
[காலை வேளையில், கடற்கரையில், சூரியன் மேகங்களால்
மூடப்பட்டிருக்க, முகம் காட்டும்படி அவனை வேண்டிப்
பாடிய பாடல்கள்.]
[ராகம் -- பூபாளம்]
சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித் திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 1
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கடலின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆத வா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
2
---------------------------------------------------------------------------------------------
25.ஞாயிறு -- வணக்கம்
கடலின் மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா,
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள்.
உடல் பரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்டுளி யும்விழி யாகச்
சுடரு நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.
1
என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா,
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 2
காதல் கொண்டனை போலும்மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்.
3
--------------------------------------------------------------------------------------------------------------
26.வெண்ணிலா
[வெண்ணிலா என்பது இங்குச் சந்திரனுடைய பிரகாசத்தையன்று,
சந்திரனையே குறிப்பது.]
எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே -- விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே.
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே-- நின்றன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே.
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே (இந்த)
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே.
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே-- வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே. 1
மாதர் முகத்தை நினைக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே -- அஃது
வயதிற் கவலையின் நாவிற் கெடுவது
வெண்ணிலாவே.
காத லொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே -- அந்தக்
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே.
மீதெழும் அன்பின் விளைபுன் னகையினள்
வெண்ணிலாவே -- முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு
வெண்ணிலாவே.
சாதல் அழித அலாது நிரந்தரம்
வெண்ணிலாவே -- நின்
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்
வெண்ணிலாவே. 2
நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே -- நன்கு
நீயும் அமுது அழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே.
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே -- அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே.
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே -- இங்கு
தோன்று முலகவே ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே.
பின்னிய மேகச் சடையுமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே.
3
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே -- நினைக்
காதல்செய் வார்நெஞ்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே.
சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே -- வண
தேசு மிகுந்தவெண் டாமரை போன்றனை
வெண்ணிலாவே.
மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே -- நீ
முத்தி னொளிதத் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே.
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே -- நலஞி
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே. 4
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே -- உன்றன
மேனி யழகு மிகைப்படக் காணுது
வெண்ணிலாவே.
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே -- மூடு
நற்றிரை மேனி நயமிக்க காட்டிடும்,
வெண்ணிலாவே.
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
வெண்ணிலாவே -- நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே.
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே -- இருள்
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி,
வெண்ணிலாவே.
5
-------------------------------------------------------------------------------------------------------------------------
27.சோமதேவன் புகழ்
பல்லவி
ஜயசோம, ஜயசோம, ஜயசோம தேவா
ஜய ஜய.
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்
வயமிக்க அசுரரின் மாயையைச் சுட்டாய்
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்
உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய்.
(ஜய)
-------------------------------------------------------------------------------------------------------------------------
28.சாகா வரம்
பல்லவி
சாகா வரமருள்வாய், ராமா
சதுர்மறை நாதா-சரோஜ பாதா!
சரணங்கள்
ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்
ஏகா மிர்த மாகிய நின்தாள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா?
(சாகா) 1
வாகார்தோள் வீரா, தீரா,
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையின் மென்றோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா (சாகா) 2
நித்யா, நிர்மலா, ராமா,
நிஷ்க ளங்கா, சர்வா, தாரா,
சத்யா, சநாதநா, ராமா,
சரணம், சரணம், சரண முதாரா!
(சாகா)
3
---------------------------------------------------------------------------------------------------
29.கிளிப் பாட்டு
திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே -- கிளியே
மகிழ்வுற் றிருப்போ மடீ 1
வெற்றி செயலுக் குண்டு
விதியின் நியம மென்று
கற்றுத் தெளிந்த பின்னும் -- கிளியே
கவலைப் படலா குமோ? 2
துன்ப நினைவு களும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியு மடீ - கிளியே
அன்புக் கழிவில்லை காண். 3
ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலை பயின்று
ஆயிர மாண் டுலகில் -- கிளியே
அழிவின்றி வாழ்வோ மடீ,
4
தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத் துடன் பணிந்தால் -- கிளியே
நெருங்கித் துயர் வருமோ?
5
--------------------------------------------------------------------------------------
30.சந்திரமதி பாட்டு
[ராகம் -- ஆனந்த பைரவி] [தாளம் -- ஆதி]
பச்சைக் குழந்தையடி -- கண்ணிற்
பாவை யடி சந்திரமதி.
இச்சைக் கினிய மது; -- என்றன்’
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே -- நல்ல
நாகமணி யுள்ள தென்பார்;
துச்சப்படு நெஞ்சிலே-நின்றன்
சோதி வளரு தடீ.
1
பேச்சுக் கிடமேதடி -- நீ
பெண்குலத்தின் வெற்றியடி
ஆச்சர்ய மாயையடி -- என்றன்
ஆசைக் குமரிய
நீச்சு நிலை கடந்த -- வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர் போல்
தீச்சுடரை வென்ற வொளி -- கொண்ட
தேவி நினை விழந்தே னடி. 2
“சந்திரமதி” என்பது காதல் கொண்டவளாகிய பெண்ணைக் குறிப்பது;
சந்திரன்
காதலிக்கு அதி தேவதையாதலால்.
[பாட பேதம்]: வீழ்ந்தேனடி: ‘விரும்பினேன், அடி’ என்ற பொருளில்
‘விழந்தேனடி’
என்று மிருக்கலாம் என்பது கவிமணியின் பாடபேதம்.
நீலக் கடலினிலே -- நின்றன்
நீண்ட குழல் தோன்றுதடி;
கோல மதியினிலே -- நின்றன்
குளிர்ந்த முகங் காணுதடி;
ஞால வெளியினிலே -- நின்றன்
ஞானவொளி வீசுதடி;
கால நடையினிலே -- நின்றன்
காதல் விளங்குதடி. (பச்சைக் குழந்தையடி)
-----------------------------------------------------------------------------------
31.தோத்திரப் பாடல்கள்
வேள்விப் பாட்டு
1. இயற்கையென் றுனையுரைப்பாா -- சிலர் இணங்கும் ஐம்பூதங்கள்
என்றிசைப்பார்
செயற்கையின் சக்தியென்பார் -- உயிர்த் தீயென்பர்,
அறிவென்பர், ஈசனென்பர்
வியப்புறு தாய்நினக்கே -- இங்கு வேள்விசெய் திடுமெங்கள்
‘ஓம்’ என்னும்
நயப்படு மதுவுண்டே -- சிவ நாட்டியங் காட்டிநல்
லருள்புரிவாய்.
2. அன்புறு சோதியென்பார் -- சிலர் ஆரிருட் காளியென்
றுனைபுகழ்வார்
இன்பமென் றுரைத்திடுவாா -- சிலர் எண்ணருந் துன்பமென்
றுனையிசைப்பார்
புன்பலி கொண்டுவந்தோம் -- அருள் பூண்டெமைத் தேவர்தங்
குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி -- எங்கள் வீரைநின் திருவடி
சரண்புகுந்தோம்.
3. உண்மையில் அமுதாவாய -- புண்கள் ஒழித்திடு வாய்களி
உதவிடுவாய்
வண்மைகொள் உயிர்ச்சுடராய -- இங்கு வளர்ந்திடு வாய் என்றும்
மாய்வதிலாய்
ஒண்மையும் ஊக்கமுந்தான -- என்றும் ஊறிடுந் திருவருட்
சுனையாவாய்
அண்மையில் என்றும் நின்றே --
4. தெளிவுறும் அறிவினைநாம் -- கொண்டு சேர்த்தனம், நினக்கது
சோமரசம்
ஒளியுறும் உயிர்ச்செடியில் -- இதை ஓங்கிடு மதிவலி தனிற்
பிழிந்தோம
களியுறக் குடித்திடுவாய் -- நின்றன் களிநடங் காண்பதற்
குளங்கனிந்தோம
குளிர்சுவைப் பாட்டிசைத்தே -- சுரர் குலத்தினிற் சேர்ந்திடல்
விரும்புகின்றோம்.
5. அச்சமும் துயரும் என்றே -- இரண்டு அசுரர்வந் தெமையிங்கு
சூழ்ந்துநின்றார்
துச்சமிங் கிவர்படைகள -- பல தொல்லைகள் கவலைகள்
சாவுகளாம
இச்சையுற் றிவரடைந்தாா -- எங்கள் இன்னமு தைக்கவர்ந்
தேகிடவே
6. கோடிமண் டபந்திகழும -- திறற் கோட்டையிங் கிதையவர்
பொழுதனைத்தும
நாடிநின் றிடர்புரிவாா -- உயிர் நதியினைத் தடுத்தெமை
நலித்திடுவார
சாடுபல் குண்டுகளால -- ஒளி சார்மதிக் கூடங்கள்
தகர்த்திடுவார்
பாடிநின் றுனைப்புகழ்வோம -- எங்கள் பகைவரை அழித்தெமைக்
காத்திடுவாய்.
7. நின்னருள் வேண்டுகின்றோம் -- எங்கள் நீதியுந் தர்மமும்
நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும் -- எங்கள் பொற்புடை மாதரும்
மதலையரும்
அன்னநல் லணிவயல்கள -- எங்கள் ஆடுகள் மாடுகள்
குதிரைகளும்
இன்னவை காத்திடவே -- அன்னை இணைமலர்த் திருவடி
துணைபுகுந்தோம்.
8. எம்முயி ராசைகளும -- எங்கள் இசைகளும் செயல்களும்
துணிவுகளும்
செம்மையுற் றிடஅருள்வாய் -- நின்றன் சேவடி அடைக்கலம்
புகுந்துவிட்டோம்.
மும்மையின் உடைமைகளும -- திரு முன்னரிட் டஞ்சலி செய்து
நிற்போம்
---------------------------------------------------------------------------------------------------------------------------
32.அக்னி தோமம் -- (தீ)
[ராகம் -- நாதநாமக்கிரியை] [தாளம் -- சதுஸ்ர ஏகம்]
ரிஷிகள்:
எங்கள் வேள்விக் கூட மீதில்
ஏறுதே தீ! தீ! -- இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ! தீ! -- இந்நேரம். 1
அசுரர்:
தோழரே, நம் ஆவி வேவச்
சூழுதே தீ! தீ! -- ஐயோ! நாம்
வாழ வந்த காடு வேவ
வந்ததே தீ! தீ! -- அம்மாவோ! 2
ரிஷி:
பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே -- இந்நேரம்
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே -- இந்நேரம். 3
அசு:
இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே -- ஐயோ! நாம்
வெந்து போக மானிடர்க்கோர்
வேத முண்டாமோ! -- அம்மாவோ!
4
ரிஷி:
வானை நோக்கிக் கைகள் தூக்கி
வளருதே தீ! தீ! -- இந்நேரம்
ஞான மேனி உதய கன்னி
நண்ணி விட்டாளே -- இந்நேரம். 5
All
அசு:
கோடி நாளாய் இவ்வனத்திற்
கூடி வாழ்ந்தோமே -- ஐயோ! நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
பண்பிழந்தோமே -- அம்மாவோ! 6
ரிஷி:
காட்டில் மேயுங் காளை போன்றான்
காணுவீர் தீ! தீ! -- இந்நேரம்
ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம்
வாட்டு கின்றானே -- இந்நேரம். 7
அசு:
வலியி லாதார் மாந்த ரென்று
மகிழ்ந்து வாழ்ந்தோமே -- ஐயோ! நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
கண்டு கொண்டாரே -- அம்மாவோ!
8
ரிஷி:
வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
வாய்திறந்தானே -- இந்நேரம்
மலியு நெய்யுந் தேனு முண்டு
மகிழ வந்தானே -- இந்நேரம். 9
அசு:
உயிரை விட்டும் உணர்வை விட்டும்
ஓடி வந்தோமே -- ஐயோ! நாம்
துயிலு டம்பின் மீதிலுந் தீ
தோன்றி விட்டானே -- அம்மாவோ! 10
ரிஷி:
அமரர் தூதன் சமர நாதன்
ஆர்த்தெழுந்தானே -- இந்நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்விற்
கோயில் கொண்டானே --இந்நேரம். 11
அசு:
வருணன் மித்ரன் அர்ய மானும்
மதுவை யுண்பாரோ! -- ஐயோ! நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
பின்னி மாய்வோமோ! -- அம்மாவோ! 12
ரிஷி:
அமர ரெல்லாம் வந்து நம்முன்
அவிகள் கொண்டாரே -- இந்நேரம்
நமனு மில்லை பகையு மில்லை
நன்மை கண்டோமே -- இந்நேரம். 13
அசு:
பகனு மிங்கே யின்ப மெய்திப்
பாடுகின்றானே -- ஐயோ! நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
பொங்கல் கண்டீரோ! -- அம்மாவோ!
14
ரிஷி:
இளையும் வந்தாள் கவிதை வந்தாள்
இரவி வந்தானே -- இந்நேரம்
விளையு மெங்கள் தீயினாலே
மேன்மை யுற்றோமே -- இந்நேரம். 15
ரிஷி:
அன்ன முண்பீர் பாலும் நெய்யும்
அமுது முண்பீரே -- இந்நேரம்
மின்னி நின்றீர் தேவ ரெங்கள்
வேள்வி கொள்வீரே -- இந்நேரம். 16
ரிஷி:
சோம முண்டு தேவர் நல்கும்
ஜோதி பெற்றோமே -- இந்நேரம்
தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
சேர்ந்து விட்டோமே -- இந்நேரம். 17
ரிஷி:
உடலுயிர்மே லுணர்விலுந் தீ
ஓங்கி விட்டானே -- இந்நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக்
கைகொடுத்தாரே -- இந்நேரம்.
18
ரிஷி:
எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணும் தீ! தீ! -- இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே -- இந்நேரம்.
19
ரிஷி:
வாழ்க தேவர்; வாழ்க வேள்வி
மாந்தர் வாழ்வாரே -- இந்நேரம்
வாழ்க வையம், வாழ்க வேதம்,
வாழ்க தீ! தீ! தீ! -- இந்நேரம்.
20
-------------------------------------------------------
33.அக்னி பகவான்
யாகப் பாட்டு
[ராகம் -- புன்னாகவராளி]
பல்லவி
தீ வளர்த்திடுவோம் -- பெருந்
வளர்ந்திடுவோம் தீ
சரணங்கள்
ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம் -- விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் -- களி
ஆவல் வளர்த்திடுவோம் -- ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
செங்கதிர் வானவனை -- விண்ணோர்தமைத்
தேனுக் கழைப்பவனைப் -- பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் -- வாரீர். (தீ)
1
சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
தீமை யழிப்பவனை -- நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை-பல
சீர்க ளுடையவனைப் -- புவி
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
ஆரியர் நாயகனை -- உருத்திரன்
அன்புத் திருமகனை -- பெருந்திர
ளாகிப் பணிந்திடுவோம் -- வாரீர். (தீ)
2
கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை -- எம்மைக்
காவல் புரிபவனைத் -- தொல்லைக்
காட்டை யழிப்பவனைத் -- திசை
எட்டும் புகழ்வளர்ந் தோங்கிட வித்தைகள்
யாவும் பழகிடவே -- புவிமிசை
இன்பம் பெருகிடவே -- பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம் -- வாரீர். (தீ)
3
நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை -- உயிர்
நீளத் தருபவனை -- ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை -- நித்தம்
அஞ்ச லஞ்சேலென்று கூறி எமக்குநல்
ஆண்மை சமைப்பவனைப்-பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் -- பெருந்திரள்
ஆகிப் பணிந்திடுவோம் -- வாரீர். (தீ)
4
அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச் -- செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் -- தடை
யற்ற பெருந்திறலை -- எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
ஏற்றதொர் நல்லறமும் -- கலந்தொளி
ஏறுந் தவக்கனலைப் -- பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்.
(தீ)
5
வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி யெழுந்தழலைக் -- கவி
வாணர்க்கு நல்லமுதைத் -- தொழில்
வண்ணந் தெரிந்தவனை -- நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம்பழம் யாவினையும் -- இங்கே யுண்டு
தேக்கிக் களிப்பவனைப் -- பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம் -- வாரீர்.
(தீ)
6
சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர் -- இன்பந்
தேக்கிடுந் தேனிசைகள் -- சுவை
தேறிடு நல்லிளமை-நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
முழுக்குடம் பற்பலவும் -- இங்கேதர
முற்பட்டு நிற்பவனைப் -- பெருந்திரள்
மொய்த்துப் பணிந்திடுவோம்--வாரீர். (தீ) 7
---------------------------------------------------------
34.வேண்டுவன
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும் 1
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம். 2
----------------------------------------------
35.கோவிந்தன் பாட்டு
கண்ணிரண்டும் இமையாமல் செந்நிறத்து
மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்,
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்,
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும் மிகப் பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே.
1
எளியனேன் யானெனலைப்போது எ
போக்கிடுவாய், இறைவனே இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரம்பில் வான
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா, நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ? 2
[பாட பேதம்]:‘மண் விளைந்திட’
-- கவிமணி
என்கண்ணை மறந்துனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக் கொண்டு
நின் கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு
வன்கண்மை மறதியுடன் சோம்பர்
முதற் பாவமெலாம் மடிந்து நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா,
எனக்கமுதம் புகட்டு வாயே.
3
-----------------------------------------------------------------
36.இறைவனை வேண்டுதல்
[ராகம் -- தன்யாசி]
பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் -- எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!
(ஓ-எத்தனை)
சரணங்கள்
சித்தினை அசித்துடன் இணைத்தாய் -- அங்குசெ
சேருமைப் தத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்.
(ஓ-எத்தனை) 1
முத்தியென் றெருநிலை சமைத்தாய் -- அங்கு
முழுதினை யுமுண ருமுணர்வமைத்தாய்
பக்தியெர்ன்றெருநிலை வகுத்தாஉய் எங்கள
பரமா, பரமா, பரமா.
(ஓ-எத்தனை)
2
[பாட பேதம்]: ‘பாவமெலா மடித்து’
-------------------------------------------------------------------
37.காளிப் பாட்டு
யாது மாகி நின்றாய்-- காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம்-- காளி
தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் -- காளி
பொறி களைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய்-காளி
பொறியை விஞ்சி நின்றாய்.
1
இன்ப மாகி விட்டாய் -- காளி
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை யல்லால் -- காளி
பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் -- காளி
ஆண்மை தந்து விட்டாய்
துன்பம் நீக்கி விட்டாய் -- காளி
தொல்லை போக்கி விட்டாய்.
2
---------------------------------------------------------------
38.காளி ஸ்தோத்திரம்
யாது மாகி நின்றாய் -- காளீ
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் -- நின்றன்
செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் -- வாழும்
பொய்ம்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதி சக்தி, தாயே-என் மீது
அருள்புரிந்து காப்பாய். 1
[பாட பேதம்]: 1.‘பொறிகளைக் கடந்தாய்’
2. ‘பொறியை மிஞ்சி’
3. ‘துயரழித்து’.
-- கவிமணி
எந்த நாளும் நின்மேல் -- தாயே,
இசைகள் பாடி வாழ்வேன்
கந்தனைப் பயந்தாய், -- தாயே,
கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில் -- வானில்
மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும் -- அங்குன்
செம்மை தோன்றும் அன்றே! 2
கர்ம யோக மொன்றே -- உலகில்
காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும் -- இங்கே
தவற லென்ப தின்றி
மர்ம மான பொருளாம் -- நின்றன்
மலர டிக்கண் நெஞ்சம்
செம்மை யுற்று நாளும் -- சேர்ந்தே
தேசு கூட வேண்டும். 3
என்ற னுள்ள வெளியில் -- ஞானத்
திரவி யேற வேண்டும்.
குன்ற மொத்த தோளும்-மேருக்
கோல மொத்த வடிவம்
நன்றை நாடு மனமும்-நீயெந்
நாளு மீதல் வேண்டும்
ஒன்றை விட்டு மற்றோர் -- துயரில்
உழலும் நெஞ்சம் வேண்டா. 4
வான கத்தி னொளியைக் -- கண்டே
மனம கிழ்ச்சி பொங்கி
யானெ தற்கும் அஞ்சேன் -- ஆகி
எந்த நாளும் வாழ்வேன்
ஞான மொத்த தம்மா -- உவமை
நானு ரைக்கொ ணாதாம்
வான கத்தி னொளியின் -- அழகை
வாழ்த்து மாறி யாதோ? 5
ஞாயி றென்ற கோளம்-தருமோர்
நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை -- எவரே
தேடி யோத வல்லார்?
வாயினிக்கும் அம்மா -- அழகாமாக
மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் -- ஆங்கே
நெஞ் சிளக்க மெய்தும்.
6
காளி மீது நெஞ்சம் -- என்றும்
கலந்து நிற்க வேண்டும்
வேளை யொத்த விறலும் -- பாரில்
வேந்த ரேத்து புகழும்
யாளி யொத்த வலியும் -- என்றும்,
இன்பம் நிற்கும் மனமும்
வாழி யீதல் வேண்டும் -- அன்னாய்!
வாழ்க நின்றன் அருளே. 7
------------------------------------------------------------
39.ஹே காளீ!
எண்ணி லாத பொருட்குவை தானும்
ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்த்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளீ;
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.
1
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்,
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்;
நான் விரும்பிய காளி தருவாள். 2
------------------------------------------------------------------------
40.மஹா காளியின் புகழ்
காவடிச் சிந்து
[ராகம்-ஆனந்த பைரவி] [தாளம்-ஆதி]
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு --ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு -- தழல்
காலும்விழி நீலவன்ன மூல அத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு -- மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம் -- இந்த
விந்தையெல்லா மாங்கது செய் கள்ளம் -- பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம் -- ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம். 1
அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை -- இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை -- அவள்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை -- அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலா மவள்புரியும் மாயை -- அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை -- எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர் நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனுந் தீயை -- எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் பேயை. 2
ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் -- ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் -- அவை
யன்றியோர் பொருளுமில்லை, அன்றியொன்று மில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -- இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது -- எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது -- அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்று
நேர்மைவேதம் சொல்லும் வழி யீது.
3
------------------------------------------------------------------
41.முத்துமாரி
உலகத்து நாயகியே, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார், எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
1
துணிவெளுக்க மண்ணுண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணிவெளுக்கச் சாணையுண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுக்கொ ரெல்லையில்லாய், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
2
--------------------------------------------------------
42.தேச முத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன்,
தேசமுத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய்,
கேட்டவரந் தருவாய்.
1
பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்,
கோடிநலஞ் செய்திடுவாய்,
குறைகளெல்லாம் தீர்ப்பாய்.
2
எப்பொழுதும் கவலையிலே
இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன்
உனதருளால் வாழ்வேன்.
3
சக்தியென்று நேரமெல்லாந்
தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால்
பயமனைத்துந் தீரும். 4
ஆதாரம் சக்தியென்றே
அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;
யாதுமவள் தொழிலாம்.
5
துன்பமே இயற்கையெனும்
சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;
யாவுமவள் தருவாள்.
6
நம்பினார் கெடுவதில்லை;
நான்கு மறைத் தீர்ப்பு ;
அம்பிகையைச் சரண்புகுந்தால்
அதிகவரம் பெறலாம். 7
[பாட பேதம்]: நான்மறையின் தீர்ப்பு -- பாரதிதாசன்.
---------------------------------------------------------------------
43.கோமதி மஹிமை
[சங்கர நயினார் கோயில் ஆவுடையம்மையின் புகழ் சிவபிரான்
தானும் திருமாலும் ஒரு பொருளென்றுணர்த்தி ஒரு வடிவங்
காட்டிய சரித்திரம்.]
தாருக வனத்திலே -- சிவன்
சரணநன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார் -- பர
சிவன்பு கழமுதினை அருந்திடுவார்
பேருயர் முனிவர் முன்னே -- கல்விப்
பெருங்கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞானத்தினால்-உயர்
சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்: 1
“வாழிய, முனிவர்களே, -- புகழ்
வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
ஊழியைச் சமைத்த பிரான், -- இந்த
உலக மெலாமுருக் கொண்டபிரான்,
ஏழிரு புவனத்திலும் -- என்றும்
இயல்பெறும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான், -- ஒளி
யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான். 2
தேவர்க் கெலாந்தேவன், -- உயர்
சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும் -- அந்தக்
கண்ணனுந் தானுமிங் கோருருவாய்
ஆவலொ டருந்தவங்கள் -- பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள் புரிந்தான், -- அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்;
3
கேளீர் முனிவர்களே -- இந்தக்
கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே,
வேள்விகள் கோடி செய்தால் -- சதுர்
வேதங்க ளாயிரமுறை படித்தால்
மூளுநற் புண்ணியந்தான் -- வந்து
மொய்த்திடும்; சிவனியல் விளங்கிநிற்கும்;
நாளுநற் செல்வங்கள் -- பல
நணுகிடும்; சரதமெய் வாழ்வுண்டாம்.
4
இக்கதை உரைத்திடுவேன், -- உளம்
இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
நக்க பிரானருளால் -- இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் -- வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்ப தியார றிவார்?
5
நக்க பிரானறிவான்; -- மற்று
நானறி யேன், பிற நர றியார்;
தொக்க பேரண்டங்கள் -- கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள்; -- ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே -- எங்குமா
அக்கரை இக்கரை யொன்றில்லையாம்.
6
இக்கட லதனகத்தே -- அங்கங்
கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்; -- திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடும்;
மிக்கதொர் வியப்புடைத்தாம் -- இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்;
மெய்க்கலை முனிவர்களே! -- இதகன்
மெய்ப்பொருள் பரசிவன் சக்தி, -- கண்டீர். 7
எல்லையுண்டோ இலையோ -- இங்கு
யாவர் கண்டார்திசை வெளியினுக்கே?
சொல்லுமொர் வரம்பிட்டால் -- அதை
.................................
(இது முற்றுப்பெற வில்லை)
8
Comments
Post a Comment